கோவை மாநகரில் சிக்னலில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க,
மாநகர காவல்துறை அறிமுகப்படுத்திய யு டர்ன் திட்டத்தால் வாகனங்கள் நெரிசலின்றி சீராக சென்று வருகின்றன. காவல் ஆணையரின் இத்திட்டத்துக்கு வாகன ஓட்டிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்….
பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கை காரணமாக, சென்னைக்கு அடுத்தப்படியாக கோவை மாநகரில் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாததாகிவிட்டது. நகரின் பல்வேறு சாலைகளில் வாகனங்கள் நெருக்கியடித்தபடி செல்லும் நிலை உள்ளது.கோவையில் அவிநாசி சாலை, பாலக்காடு சாலை, பொள்ளாச்சி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலை ஆகிய பிரதான சாலைகள் மட்டுமின்றி, மாநகரத்தை இணைக்கு பல்வேறு சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி காணப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் போக்குவரத்து சிக்னல்களில், சிவப்பு விளக்கு ஒளிரும்போது வாகனங்கள் சாலைகளுக்கு ஏற்றவாறு நீண்ட நேரம் காத்திருந்து செல்லும் நிலை உள்ளது. இதனால் சிலசமயங்களில் அவரசர தேவைக்கு செல்பவர்களும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் கூட விரைந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க ‘யு டர்ன்’ திட்டத்தை போலீஸார் செயல்படுத்தியுள்ளனர்.
இது குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறும் போது முக்கிய சாலைகளில் நெரிசல் மற்றும் சிக்னல்களில் காத்திருப்பை குறைக்க நெடுஞ்சாலைத் துறையினருடன் நீண்ட ஆய்வுக்கு பின் சாலைகளுக்கு ஏற்ப ‘யு டர்ன்’ அல்லது ‘ரவுண்டானா’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ‘யு டர்ன்’திட்டம் என்றால் சிக்னல்கள் மூடப்பட்டுவிடும்.
அதற்கு 100 மீட்டர் முன்பும், பின்பும் வாகனங்கள் திரும்ப தடுப்புக் கற்களை அகற்றி இடைவெளி ஏற்படுத்தப்படும். இந்த இடைவெளி வழியாக வாகனங்கள் ‘யு டர்ன்’ செய்து வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். ‘ரவுண்டானா’ திட்டமும் இதே முறை தான். சிக்னல்களை அகற்றிவிட்டு அங்கு தடுப்புக் கற்களை அமைத்து ரவுண்டானா ஏற்படுத்தப்பட்டு வாகனங்கள் செல்ல வழிவகை செய்யப்படும். இதனால் வாகனங்களை நிறுத்த வேண்டியதே இல்லை. சென்றுகொண்டே இருக்கலாம்.எனவும் அவர் தெரிவித்தார்.
அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் சந்திப்பு, லட்சுமி மில் சந்திப்பு, அண்ணா சிலை சந்திப்பு, எஸ்.ஓ பங்க் சந்திப்பு, திருச்சி சாலையில் சிங்காநல்லூர் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் இந்த ‘யு டர்ன்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கிக்கானி பள்ளி சந்திப்பு, சிந்தாமணி சந்திப்பு, சுங்கம் சந்திப்பு, சுங்கம் – உக்கடம் பைபாஸ் சாலையில் வின்சென்ட் சாலை பிரிவு, லாலி சாலை சிக்னல் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் ரவுண்டானா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார். இந்த திட்டதால் பொதுமக்கள் அவசர தேவைக்கு நீண்ட நேரம் சிக்னலில் நிற்காமல் மன அழுத்தமும் ஏற்படாமல் சாலையில் பயனிப்பதால் இந்த திட்டத்தை விரிவு படுத்தவும் இருப்பதாக காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்
கோவை செய்தியாளர் பிரசாந்த், நியூஸ் 7 தமிழ்