விமான பயணிகளுக்கு குட் நியூஸ்… இனி எந்த கட்டணமும் இல்லாமல் டிக்கெட்டை ரத்து செய்யலாம்!

விமான டிக்கெட்டுகளை 48 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் எந்தவித கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று விமான நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்த பின் அவற்றை ரத்து செய்யும்போது அவற்றுக்கான ‘ரீபண்டு’ பணம் மிகவும் குறைவான அளவிலேயே வழங்கப்பட்டு வந்தது. பயணிகள் தலையில் இழப்பை சரிகட்ட விமான நிறுவனங்கள் மற்றும் முன்பதிவு ஏஜென்சிகளிடையே போட்டாபோட்டி நடந்தது. இதனால் பயணிகள் பெரிய பாதிப்புக்கு உள்ளாகி வந்தனர்.

இதன் காரணமாக டிக்கெட் ரத்து நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என பயணிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய விமான போக்குவரத்தை நிர்வகிக்கும் இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் சீர்திருத்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்த 2 நாட்களுக்குள் பயணிகள், எந்த கட்டணமும் இல்லாமல் டிக்கெட்டுகளை ரத்து செய்யவோ அல்லது மாற்றவோ செய்யலாம் என புதிய வரைவு விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், விமான பயண டிக்கெட் ஏஜென்சிகள் மூலம் வாங்கப்பட்டாலும், பயணிகளுக்கு முழுத்தொகையையும் திரும்ப அளிக்கும் பொறுப்பையும் விமான நிறுவனங்களே ஏற்க வேண்டும். டிக்கெட் ரத்து செய்யப்பட்டதில் இருந்து 14 வேலை நாட்களுக்குள் பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும். மேலும் 24 மணிநேரத்துக்குள் டிக்கெட்டில் திருத்தம் செய்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது எனவும் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது வருகிற மார்ச் 26-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.