அசானி புயலில் போது ஆந்திர கடற்கரை ஓரத்தில் கரை ஒதுங்கிய தங்க நிற தேரால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வங்கக் கடலில் உருவான அசானி புயல் தீவிரமடைந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. நேற்று 11.30 மணியளவில் ஆந்திரப்பிரதேசத்தின் மசூலிப்பட்டினத்தில் இருந்து 90 கிலோமீட்டர் தெற்கு, தென்கிழக்கில் மையம் கொண்டிருந்தது. இது வடமேற்கில் நகர்ந்து ஆந்திரப்பிரதேச கடலோரப் பகுதிக்கு இன்று வந்துசேரும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
பின்னர், இது திசைமாறி வடக்கு, வடகிழக்கு திசையில் நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இன்று காலை புயலாகவும், நாளை தீவிர காற்றழுத்தமாகவும் வலுகுறையும் என்று அதிகாரிகள் கணித்துள்ளனர்.
அசானி புயல் காரணமாக ஆந்திர பிரதேச மாநிலத்தில் கடும் கடல் கொந்தளிப்பு காணப்பட்டது. இந்நிலையில் சுன்னப்பள்ளி கடல் துறைமுகத்தில் கடல் கொந்தளிப்பால் தங்க நிற தேர் ஒன்று கடலில் மிதந்து வந்து கரை ஒதுங்கியது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த தங்க தேர் வேறு நாட்டிலிருந்து வந்திருக்கலாம். இது பற்றிய தகவல்களை சேகரிக்க உளவுத்துறை மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம்” என்றார்.







