அட்சய திருதியை முன்னிட்டு நேற்று ரூ.14,000 கோடி மதிப்பிலான தங்கம் விற்பனையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அட்சய திருதியை என்றாலே நம் நினைவுக்கு வருவது தங்க நகைகளும், அதற்கான ஆஃபர்களும் தான். ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது. சித்திரை மாதம் அமாவாசைக்குப் பின் வரும் வளர்பிறையே, அட்சய திருதியை நாளாக கொண்டாடப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அட்சய திருதியை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் அனைத்து நகை கடைகளிலும் தோரணங்கள் மற்றும் வாழை மரங்கள் கட்டி வாடிக்கையாளர்களை உரிமையாளர்கள் வரவேற்றனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் தங்கத்தின் விலை 3 முறை உயர்ந்துள்ளது. நேற்று காலை சவரனுக்கு ரூ. 360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 53,280க்கும், கிராம் ஓன்றின் விலை ரூ. 6660க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதனையடுத்து இரண்டாவது முறையாக மீண்டும் ரூ. 360 உயர்ந்து சவரன் ஒன்று ரூ. 53,640க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து மீண்டும் 3-வது முறையாக கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ. 6,770க்கும், சவரனுக்கு ரூ. 520 உயர்ந்து ரூ. 54, 160க்கு விற்பனை செய்யப்பட்டது.
இருப்பினும் நகைக்கடைகள், ஒரு கிராம் தங்கம் வாங்கினால் ரூ.50 முதல் ரூ.100 வரை சிறப்புத் தள்ளுபடி, பழைய தங்கத்தை மாற்றி புதிய தங்கம் வாங்கினால் பழைய தங்கத்துக்கு கிராமுக்கு ரூ.50 கூடுதலாக அளிப்பு, செய்கூலி, சேதாரம் தள்ளுபடி, வைர நகைகளுக்கு ரூ.10,000 வரை தள்ளுபடி என பல சிறப்புத் திட்டங்களை அறிவித்ததால் கடைகளில் கூட்டம் அலைமோதியது.
சென்னை மட்டுமல்லாமல் கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாநகரங்கள் மட்டுமல்லாது சிறிய நகரங்களில் உள்ள நகைக்கடைகளிலும் சிறப்பு விற்பனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள நகைக் கடைகளில் நேற்று ரூ.14,000 கோடி மதிப்பிலான தங்கம் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா். மேலும் விற்பனையான தங்கத்தில் 80 சதவீதம் ஆபரண நகைகள், 20 சதவீதம் நாணயங்கள் என தெரிவிக்கப்பட்டது.