சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

தாய்லாந்து, மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனர்.   சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும்…

தாய்லாந்து, மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனர்.

 

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் பெரும் அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரி உதய் பாஸ்கருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.

 

அப்போது தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னை அசோக் நகரை சேர்ந்த சாகுல் அமீது (வயது 30), திருச்சியை சேர்ந்த ரசீத் (28), மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னை மண்ணடியை சேர்ந்த அருண் பாண்டியன் (30), துபாயில் இருந்து வந்த புதுக்கோட்டையை சேர்ந்த பழனிசாமி (32) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

 

4 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களது உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் கிடைக்கவில்லை என்பதால், அவர்களை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

மேலும் துபாயில் இருந்து வந்த புதுக்கோட்டையை சேர்ந்த பழனிச்சாமி அணிந்து இருந்த காலணியில் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். 4 பேரிடம் இருந்து ஒரு கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ 80 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 4 பேரையும் கைது செய்து தங்க கடத்தல் பிண்ணனியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.