தங்கம் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்புள்ளதாக ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி கேரள மாநிலம், திருவனந்தபுரம சர்வதேச விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் கடத்தி வரப்பட்ட ரூ. 15 கோடி மதிப்பிலான தங்கம் சுங்கத் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, சுங்கத் துறை மற்றும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), அமலாக்கத் துறை ஆகிய அமைப்புகள் இந்த விவகாரத்தை தனித்தனியாக விசாரித்து வருகின்றன.
இந்த மோசடியில் முக்கிய குற்றவாளியாக ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் முன்னாள் ஊழியரான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரை என்ஐஏ அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி பெங்களூரில் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் எம்.சிவசங்கர், ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் மற்றொரு முன்னாள் ஊழியர் சரித் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். மேலும், சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின்கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முதல்வர் பினராஜி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக ஸ்வப்னா வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பினராயி விஜயன் மட்டுமின்றி அவரது மனைவி கமலா, மகள் வீனா, முதன்மைச் செயாலாளர் சிவசங்கர் உள்ளிட்டோருக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார். தங்கம் கடத்துவது தொடர்பாக கடந்த 2016 ஆம் ஆண்டு துபாயில் பினராயி விஜயனுக்கும் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள முதல்வர் பினராயி விஜயன், தங்கம் கடத்தல் வழக்கில் அரசியல் செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
-ம.பவித்ரா







