சிவகளையில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் முதன்முறையாக தங்கத்தால் ஆன பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் மத்திய தொல்லியல்துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு இதுவரை நடைபெற்ற அகழாய்வின் போது பரம்பு பகுதியில் 400-க்கும் மேற்பட்ட பொருட்களும், வாழ்விடப் பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட பொருட்களும், 48 முதுமக்கள் தாழிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குழந்தைகள் விளையாடும் வட்ட சில்கள், பெண்கள் அணியும் காதணிகள், சதுரங்க காய்கள், நூல் நூற்க பயன்படும் தக்களி, சுடுமண்ணால் செய்யப்பட்ட முத்திரைகள், சுடுமண் பந்து, சுடுமண் சக்கரம், பட்டை தீட்டும் கற்கள், எலும்புகளால் ஆன கூர்முனைக் கருவிகள், அம்மி குழவி, கண்ணாடி வளையல்கள், சங்கு வளையல்கள், பாசிமணிகள், சீன நாட்டு நாணயம், வாள், கத்தி என ஏராளமான பொருட்கள் கிடைத்தன.
மேலும் ஆவாரங்காடு திரட்டு பகுதியில் சுடாத செங்கற்களால் எழுப்பப்பட்ட கட்டுமானம், பராக்கிரம பாண்டி திரட்டில் செங்கற்களால் கட்டப்பட்ட கழிவுநீர் வடிகால் என, முக்கியத்துவம் வாய்ந்த தடயங்களும் கண்டு பிடிக்கப்பட்டன. இந்நிலையில், முதன் முதலில் அங்கு தங்கத்தினால் ஆன பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பராக்கிரமபாண்டி திரட்டில் வாழ்விடப்பகுதிகளை கண்டறிவதற்காக நடைபெற்று வரும் அகழாய்வு பணிகளின்போது, அங்கு தங்கத்தால் ஆன சிறிய பொருள் எடுக்கப்பட்டது.
இதுவரை மண்ணால் ஆன பொருட்களும், எலும்புகள் கிடைத்த நிலையில், முதன் முதலில் தங்கப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழாய்வு பணியின்போது தங்கத்தால் ஆன நெற்றி பட்டயம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், தற்போது சிவகளையிலும் தங்க பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. சிவகளையும் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என நியூஸ் 7 தமிழ் முதலில் குரல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
– இரா.நம்பிராஜன்