கோகுல்ராஜ் கொலை வழக்கு; அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு நேரில் சென்று பார்வையிட நீதிபதிகள் முடிவு

நாமக்கலில் ஆணவக்கொலை செய்யப்பட்ட  கோகுல்ராஜ் கடைசியாக இருந்த திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு ஜனவரி 22ம் தேதியன்று நேரில் சென்று பார்வையிட உள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலுரை சேர்ந்த…

நாமக்கலில் ஆணவக்கொலை செய்யப்பட்ட  கோகுல்ராஜ் கடைசியாக இருந்த திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு ஜனவரி 22ம் தேதியன்று நேரில் சென்று பார்வையிட உள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஓமலுரை சேர்ந்த கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை
விதிக்கப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட 10 பேரின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான
விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதியிடம் விசாரித்தபோது  வீடியோ காட்சிகளை ஒளிபரப்பி நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பினர். அதற்கு அவர் முன்னுக்கு பின்
முரணாக பதிலளித்ததால்  விசாரணை நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் சுவாதி
மாறி மாறி சாட்சியம் அளித்ததாக கூறி, நீதிமன்றமே தாமாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு
முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சுவாதிக்கு பதிலாக அவரது  கணவர் ஆஜரானார். சுவாதி கர்ப்பமாக இருப்பதால் ஆஜராக முடியாத நிலை உள்ளதாக சுவாதியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், கோகுல்ராஜ் கொலை வழக்கில் விசாரணை நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் பொய் சாட்சியம் கூறியும், பிறழ் சாட்சியமாக மாறியும் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்திய சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து அதற்கான மெமோவை அவரது கணவரிடம் வழங்க உத்தரவிட்டனர்.

கோகுல்ராஜின் தாயார், அரசு தரப்பு மற்றும் சிபிசிஐடி தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் யுவராஜ் உள்ளிட்ட மேல்முறையீடுதாரர்கள் தரப்பு வாதங்களுக்காக வழக்கு விசாரணையை ஜனவரி 20ம் தேதி நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

இதனிடையே, கோகுல்ராஜ் இருந்ததாக கடைசியாக பதிவான திருச்செங்கோடு
அர்த்தநாரீசுவரர் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக நீதிபதிகள்
தெரிவித்துள்ளனர். கோயிலின் அமைப்பை புரிந்து கொள்ளவும், உள்ளே செல்லும் வழி,
வெளியே வரும் வழி ஆகியவை குறித்து புரிந்து கொள்வதற்காக ஜனவரி 22ல் நேரடியாக
சென்று ஆய்வு செய்யவுள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.