இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், மீண்டும் கிரிக்கெட் ஆட இருப்பதா கத் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங். சக வீரர்களாக செல்லமாக யுவி என அழைக்கப்படும் அவருக்கு இப்போது வயது 39. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், அதில் இருந்து முழுமையாகக் குணமடைந்து பின்னர் மீண்டும் அணியில் இணைந்தார். பின்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச கிரிக் கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடைசியாக 2017 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் பங்கேற்றிருந்தார்.
இதுவரை 40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒரு நாள் போட்டி மற்றும் 58 டி-20 போட்டிகளில் பங்கேற்றுள்ள யுவராஜ் சிங் , ஒரு நாள் போட்டிகளில் 14 சதங்களை விளாசியுள்ளார். இந்நிலையில், ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் மீண்டும் கிரிக்கெட் விளையாட இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ள அவர், ‘உங்கள் தலைவிதியை கடவுள் தான் தீர்மானிக்கிறார். ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று பிப்ரவரி மாதம் கிரிக்கெட் களத்தில் மீண்டும் இறங்குவேன் என நம்புகிறேன். உங்கள் அன்பும் வாழ்த்துகளும் எனக்கு முக்கியம். தொடர்ந்து ஆதரவளியுங்கள். கடினமான நேரங்களில் ரசிகர்கள் எனக்கு ஆதரவளிப்பது மகிழ்ச்சியளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், அவர் இந்திய அணிக்காக ஆட இருக்கிறாரா, டி-20 தொடரில் ஆட இருக்கிறாரா என்பது பற்றி எதையும் தெரிவிக்கவில்லை. அவர் கிரிக்கெட்டுக்கு திரும்புகிறார் என்பதை அறிந்து ரசிகர்கள் குஷியாகி இருக்கின்றனர்.








