சிக்கிம் மாநிலத்தில் கொட்டி தீர்த்த கனமழையை தொடர்ந்த தீஸ்தா நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் மாயமான 23 ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 30 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சிக்கிம் மாநிலம் லச்சேன் பள்ளத்தாக்கு பகுதியில் திடீரென கனமழை கொட்டி தீர்த்ததுடன் காட்டாற்று வெள்ளம் உருவானது. தீஸ்தா நதியில் பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 23 ராணுவ வீரர்கள் மாயமாகினர். அவர்கள் அனைவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
ராணுவ வீரர்கள், வாகனங்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. “லாச்சென் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள சில ராணுவ நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சில வாகனங்கள் சேற்றில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிக்கிமில் உள்ள மங்கன் (வடக்கு சிக்கிம்), பாக்யோங் மற்றும் காங்டாக் (கிழக்கு சிக்கிம்) ஆகிய மூன்று மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். “வட சிக்கிம் துண்டிக்கப்பட்டுள்ளது மற்றும் சாலைகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த திடீர் வெள்ளம் மேக வெடிப்பால் ஏற்படவில்லை என்று காங்டாக்கில் உள்ள இந்திய வானிலை ஆய்வுத் துறையின் பிராந்திய அலுவலகம், கூறியுள்ளது. ஒரு சிறிய பகுதி ஒரு மணி நேரத்திற்குள் குறைந்தது 100 மிமீ மழையைப் பெறும்போது மேகம் வெடிப்பு என அழைக்கப்படுகிறது.
“ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் வடக்கு சிக்கிமில் அதிகபட்சமாக 39 மிமீ மழை பெய்துள்ளது. எனவே, இது மேக வெடிப்பு என்று கூற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஜார்க்கண்டில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் அதனுடன் தொடர்புடைய சூறாவளி சுழற்சியால் மேற்கு வங்காளத்தில் கனமழை பெய்து வருகிறது. வியாழன் வரை கிழக்கு மாநிலத்தில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கனமழையால் பிர்பூம், பங்குரா, மேற்கு பர்த்வான், கிழக்கு பர்த்வான், மேற்கு மிட்னாபூர், ஹூக்ளி மற்றும் ஹவுரா உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
“பங்குரா மாவட்டத்தில் 1000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பங்குரா மற்றும் புருலியா மாவட்டங்களில் குறைந்தது 35 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.