ஆளுங்கட்சியினர் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்துவது ஏற்புடையதல்ல என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த காரணம்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு கூப்பிடு பிள்ளையார் கோயிலில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது :
“வருமான வரித்துறை சோதனை என்பது புதிதல்ல. வழக்கமான ஒன்று தான். ஆனால் ஆளுங்கட்சியினர் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்துவது ஏற்புடையதல்ல. ஆளுங்கட்சியினரின் பணபலமும், அதிகார பலமும் வெளிவருவதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆதாரங்களின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களை தடுக்கவோ, அவர்கள்மீது தாக்குதல் நடத்தவோ யாருக்கும் அதிகாரம் இல்லை. முதல்வரின் சிங்கப்பூர் சுற்றுப்பயணம் வெறும் விளம்பரத்துக்காக மட்டும் இருக்கக் கூடாது. தமிழகத்தில் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்”.
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
– கோ.சிவசங்கரன்







