ஜெயங்கொண்டம் அருகே கருக்கலைப்பு என்கிற பெயரில் இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் கொத்தடை கிராமத்தை சேர்ந்தவர் வசந்த குமார். திருமணமான இவருக்கும் அவரது வீட்டின் அருகே இருக்கும் திருமணமாகாத பெண் ஒருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதனால், அந்த பெண் கர்ப்பமாகியுள்ளார். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள ராங்கியம் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். அவரிடம் கருக்கலைப்பு செய்வதற்காக அந்த பெண் அணுகியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து கருவை கலைப்பதற்கு செவிலியர் சம்மதம் தெரிவித்து, ஆண்டிமடம் அருகே அன்னங்காரங்குப்பம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் வைத்து கருக்கலைப்பு செய்வதாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து அங்கு சென்ற அந்த பெண்ணிற்கு மயக்க மருந்து கொடுத்து செவிலியர் கருக்கலைப்பு செய்துள்ளார். இதில், உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த பெண் உயிரிழந்தார்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் செவிலியரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த பெண்ணின் உடலுறுப்பை கிழித்து குழந்தையை வெளியே எடுத்து வீட்டின் பின்புறத்தில் குழிதோண்டி புதைத்ததாக வாக்குமூலம் அளித்தார். இது தொடர்பாக கிருஷ்ணவேணி, வசந்தகுமார், திருமூர்த்தி ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களுக்கு உடந்தையாக இருந்த மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.