பிரபல நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி 60வது வயதில் அசாம் மாநிலத்தைச் ரூபாலி பருவா என்பவரை இன்று இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
தமிழில் பெரும்பாலும் வில்லன் நடிகராக அறியப்படும் ஆஷிஷ் வித்யார்த்தி கடந்த 1962-ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி டெல்லியில் பிறந்தவர். இவர் தனது சினிமா பயணத்தை 1986-ம் ஆண்டு தொடங்கினார். தமிழ் திரையுலகில் கில்லி, ஆறு, கந்தசாமி, உத்தமபுத்திரன் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் நடித்து தனது வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் 300- க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் தமிழில் இவர் நடித்த தில், கில்லி ஆகிய படங்கள் என்றும் மறக்க முடியாதவை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இன்றும் பலரது மனங்களிலும் சிறந்த வில்லன் நடிகராக அறியபப்டும் ஆஷிஷ் வித்யார்த்தி தனது சிறந்த நடிப்பிற்காக 1995-ஆம் ஆண்டு துணை நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ளார். ஏற்கனவே முன்னாள் நடிகை சகுந்தலா பருவாவின் மகளும், நடிகையும், பாடகியுமான ரஜோஷி பருவாவை முதலாவதாக திருமணம் செய்திருந்தார். இருவரும் பிரிந்துவிட்ட நிலையில், இவர் தற்போது அசாமை சேர்ந்த தொழில்முனைவோரான ருபாலி என்பவரை கொல்கத்தாவில் உறவினர்கள் முன்னிலையில் வைத்து மிக எளிமையாக தனது 60வது வயதில் பதிவுத் திருமணம் செய்துகொண்டார்.
இந்த திருமணம் குறித்து பேசிய வித்யார்த்தி, சில வருடங்களுக்கு முன்பு சந்தித்துக் கொண்ட நாங்கள் இருவரும், எங்கள் உறவினை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல விரும்பினோம். அதன்படி எங்களின் திருமணம் சிறிய குடும்ப நிகழ்வாக இருக்க வேண்டும் என்று நினைத்து, இப்போது மிக எளிமையாக பதிவுத் திருமணம் செய்துள்ளோம். இதேபோல் தொழில் முனைவோராக உள்ள ருபாலி தங்களது திருமணம் குறித்து பேசுகையில், நாங்கள் இருவரும் நீண்ட நாட்களாக பழகி திருமண பந்தத்தில் இணைந்துள்ளதாக கூறி மகிழ்ச்சியடைந்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா