காதலை முறிப்பதற்காக ’நாம் நல்ல நண்பர்களாக இருக்கலாம்’ என்று கூறுவது தனக்கு எரிச்சலூட்டுவதாக நடிகர் நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.
திரைப் பிரபலங்களான நாக சைதன்யா மற்றும் சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு, இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்களின் குடும்பத்திற்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெறுவதாக அறிவித்தனர். ஆனால் தங்களுக்கு இடையிலான நட்பு தொடரும் என்றும் தெரிவித்திருந்தனர்.
அண்மையில் சமந்தா நடித்த சாகுந்தலம் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதன் பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல் நாக சைதன்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில், கஸ்டடி எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதையும் படியுங்கள் : கர்நாடகா தேர்தல் – கவரும் தேர்தல் அறிக்கை…. மக்கள் தீர்ப்பு என்ன…?
இந்த படத்திற்கான புரொமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், கண்டடி படத்தின் புரொமோஷனுக்காக, பிரபல யூடியூபர் இர்ஃபான் நடத்திய நேர்காணலில் நாக சைதன்யா கலந்து கொண்டார். அதில் காதல் முறிவு குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது.
அப்போது பேசிய யூடியூபர் இர்ஃபான், தனக்கு ஏற்பட்ட காதல் முறிவு குறித்து தெரிவித்தார். தங்களுக்கு இடையில் காதல் ஒத்துவராது என்றும், நல்ல நண்பர்களாக இருக்கலாம் என்றும், காதல் முறிவின்போது தனது முன்னாள் காதலி கூறியதாக இர்ஃபான் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நாக சைதன்யா, “நாம் நல்ல நண்பர்களாக இருக்கலாம்… இந்த வார்த்தைகள் தான் எனக்கு எரிச்சலூட்டுகிறது. நாம் அவர்களிடம் நட்பைக் கேட்பதில்லை” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ”எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த வருத்தமும் இல்லை. நான் கற்றுக்கொண்ட அனுபவங்களாகவே அவற்றைப் பார்க்கிறேன்” என்று தெரிவித்தார்.







