மழை முடியும் வரை அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அந்த வகையில் இன்று தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த முதலமைச்சர், பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
தொடர்ந்து மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக உணவு தயார் செய்யப்படும் இடத்தில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உணவு தரமாக இருக்கிறதா என சாப்பிட்டு பார்த்தார். மேலும், சென்னை போரூரில் உள்ள அம்மா உணவகத்தில் உணவை சாப்பிட்டுப் பார்த்து தரத்தை ஆய்வு செய்தார்.
இதனிடையே ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், அதிமுக ஆட்சிகாலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கொள்ளையடித்துள்ளனர். மழைநீர் வடிகால் பணிகளில் சொல்ல முடியாத அளவிற்கு கொள்ளையடித்துள்ளனர். பொய் சொல்வதற்கென்றே பிறந்தவர் எடப்பாடி பழனிசாமி” என்று குற்றம்சாட்டினார்.
மழை முடியும் வரை அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்த முதலமைச்சர், மாநகராட்சி சார்பாகவும் உணவு சமைத்து வழங்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.








