தமிழகத்தில் இன்று முதல் அனைத்து நகர்ப்புற சாதாரண பேருந்துகளில் இலவசமாகப் பெண்கள் பயணிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று ஆளுநர் மாளிகையில் பதவியேற்றார். அவரைத்தொடர்ந்து 34 அமைச்சர்களும் பதவியேற்றனர். ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றதும் முக்கியமான 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். ஆவின் பால் விலை ரூ. 3 குறைப்பு, நகர்ப்புற சாதாரண பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்,தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் முழுச் செலவு அரசு ஏற்பது, கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்குதல் உள்ளிட்ட கோப்புகளில் கையெழுத்திட்டார்.
மேலும் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்திற்கும் ஐஏஏஸ் அதிகாரி நியமிக்கப்பட்டு அரசு உத்தரவிட்டது. அதுபோல முதல்வரின் செயலாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். மேலும் தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று முதல் அனைத்து நகர்ப்புற சாதாரண பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யும் திட்டம் இன்று முதல் அமலாக உள்ளது.







