முன்னாள் மத்திய அமைச்சர் ஷரத் யாதவ் மறைவு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

முன்னாள் மத்திய அமைச்சர் ஷரத் யாதவ் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்டிரிய ஜனாதா தள கட்சித் தலைவருமான ஷரத் யாதவ் தனது 75வது வயதில் நேற்று இரவு…

முன்னாள் மத்திய அமைச்சர் ஷரத் யாதவ் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்டிரிய ஜனாதா தள கட்சித் தலைவருமான ஷரத் யாதவ் தனது 75வது வயதில் நேற்று இரவு காலமானார். இதனை அவரது மகள் சுபாஷினி ஷரத் யாதவ் ட்விட்டரில் உறுதிப்படுத்தினார்.

முன்னாள் அமைச்சர் ஷரத் யாதவ் உடல்நிலை குறைபாடு காரணமாக குருகிராமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதளத்தின் முன்னாள் தலைவரான ஷரத் யாதவ், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் 1999-2004 மத்திய அமைச்சராக இருந்தார்.

பின்னர் நிதிஷ்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஷ்டிரிய ஜனதா தள கட்சியிலிருந்து பிரிந்து லோக் தந்திரிக் ஜனதா தளம் எனும் தனிக் கட்சி தொடங்கினார். வயது முதுமை காரணமாக உடல்நலக்குறைவால் அரியானாவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானார்.

இவரது மறைவிற்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எம்பி ராகுல் காந்தி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னாள் மத்திய அமைச்சரான ஷரத் யாதவ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், ஆர்.ஜே.டி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் யாதவ் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. தனது கடைசி மூச்சு வரை ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை என்ற இலட்சியங்களுக்கு ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் இருந்த மிக உயர்ந்த சோசலிச தலைவர்களில் ஒருவரை நாம் இழந்துவிட்டோம். எனது இதயப்பூர்வமான இரங்கல்கள் என்று தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.