ஓமலூர் வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த நான்கு பேருக்கு வனத்துறையினர் அபாராதம் விதித்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி அருகே உள்ள டேனிஸ்பேட்டை, கருவாட்டு பாறை, சின்னேரிக்காடு, வழித்தட சரகத்தில் காட்டு விலங்குகளை ஒரு கும்பல் வேட்டையாடுவதாக் டேனிஸ்பேட்டை வனச்சரக அலுவலருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தின்னப்பட்டி பிரிவு கருவாட்டுப் பாறை – சின்னேரிக்காடு வழித்தடத்தில் நாட்டு துப்பாக்கிகளுடன் வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 4 பேரை சுற்றி வளைத்து அதிகாரிகள் கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் சேலம் நகர மலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்த சரவணன் 36, இளங்கோ 31, சேலம் டவுன் பிளானிங் நகர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் 37, கூகுட்டப்பட்டி ஊராட்சி கலுங்குபள்ளம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் 37, ஆகியோர் நாட்டு துப்பாக்கிகளுடன் வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட வந்தது விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் அவர்களை கைது செய்த வனத்துறையினர், வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவர்களுக்கு தலா ரூ.25,000 வீதம் 4 பேருக்கும் அபராதம் விதித்தனர். தொடர்ந்து வன விலங்குகளை வேட்டையாடினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.







