கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த வழக்கில், சம்மந்தப்பட்ட மருத்துவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திடீரென ஆம்புலன்ஸ் வாகனம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா(17) என்பவர் காலில் காயத்துடன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். மருத்துவர்களின் அலட்சியமான சிகிச்சையால் பிரியா உயிரிழந்தது தெரியவந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து, சம்மந்தப்பட்ட மருத்துவர்களை பணிநீக்கம் செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். இதனிடையே, மாணவி உயிரிழந்த விவகாரம் குறித்து மருத்துவத்துறை அளித்துள்ள விளக்கத்தில், அவருக்கு காலில் இருக்கமான கட்டு போட்டிருப்பதே காரணம் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மாணவியின் உடலுக்கு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரதே பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அப்போது, பிரியாவின் உடலை பார்த்து உறவினர்களும், நண்பர்களும் கதறி அழுதனர். அப்போது, ஆத்திரமடைந்த பிரியாவின் நண்பர்கள் உடலை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றவிடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும், ஆம்புலன்ஸ் வாகனம் முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது, சம்மந்தப்பட்ட மருத்துவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.