ஆயுத பூஜையை முன்னிட்டு ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பூக்களின்
விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் பத்து ரூபாய்க்கு விற்பனையான சாமந்தி பூக்கள் தற்போது 80 ரூபாய்க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த பகுதியில் சாமந்தி, குண்டுமல்லி,
ஜாதிமல்லி, கனகாம்பரம் காக்கட்டான், அரளி, சம்பங்கி, கோழி கொண்டை, ரோஜா உள்ளிட்ட பூக்கள் அதிகளவில் பயிரிடப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இங்கு பயிரிடப்படும் பூக்களை ஓமலூர் அருகே உள்ள பூசாரிப்பட்டி பூ மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். இங்கு வாங்கப்படும் பூக்கள் பெங்களூர், சென்னை, திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் வரை சாமந்தி பூக்கள் ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனையாகிய நிலையில் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
இந்த நிலையில் வரும் 23ஆம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. ஓமலூர் அருகே உள்ள பூசாரிப்பட்டி பூ மார்க்கெட்டில் சாமந்தி, அரளி, குண்டுமல்லி, முல்லை பூ உள்ளிட்ட பூக்களின் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ குண்டு மல்லி 700 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஜாதி மல்லி 280 க்கும், காக்கட்டான் 140 க்கும் சம்பங்கி பூ 140 ரூபாய் அரளி 300 ரூபாயும் சாமந்திப்பூ 80 ரூபாய் என விற்பனை ஆகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.