சென்னை கலைவாணர் அரங்கில் ஜூன் 3 முதல் 5 ஆம் தேதி வரை மலர்க் கண்காட்சி நடைபெறவுள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, தோட்டக் கலைத் துறை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் முதன்முறையாக மலர்க் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சிக்காக 200க்கும் அதிகமான வண்ணமலர்கள் அரங்குக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
கண்காட்சியில் மலர் அலங்காரங்கள், காய்கறியால் செதுக்கப்பட்ட உருவங்கள், செல்ஃபி எடுப்பதற்கான பிரத்யேக இடங்கள் அமைக்கப்படுகின்றன. மேலும், மலர் வளைவுகள், மலர் தொட்டிகளில் வண்ண மலர்கள், மலர்களால் வடிவமைக்கப்பட்ட கோப்பை ஆகியவை தயாராகி வருகின்றன.
கலைவாணர் அரங்கில் சிறந்த புகைப்பட கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனுப்பும் சிறந்த புகைப்படங்கள் மலர்க் கண்காட்சியில் வைக்கப்படும்.
இந்த பிரம்மாண்ட மலர் கண்காட்சியைப் பார்வையிட பெரியவர்களுக்கு ரூ. 50 , மாணவர்களுக்கு ரூ. 20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கலைவாணர் அரங்கில் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை மலர்க் கண்காட்சியை பொதுமக்கள் கண்டுகளிக்கலாம் என தோட்டக் கலைத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






