மீன்பிடிப் படகுகள் ஏலம்: பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான மீன்பிடிப் படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசின் முயற்சிகளை உடனடியாகத் தடுத்து நிறுத்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர்…

இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான மீன்பிடிப் படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசின் முயற்சிகளை உடனடியாகத் தடுத்து நிறுத்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான மீன்பிடிப் படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்திடவும், இலங்கையின் பல்வேறு கடற்படைத் தளங்களில் நிறுத்தப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை விடுவிக்கவும் பிரதமர் நரேந்திர மோடி, அவசரமாகத் தலையிட வேண்டுமென்று கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (7-2-2022) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு, இலங்கை அரசு வசம் உள்ள தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 105 மீன்பிடிப் படகுகளை ஏலம் விடுவதற்கு இலங்கை அரசின் மீன்வளம் மற்றும் நீரியல் வளத் துறை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இலங்கை அரசின் இந்த நடவடிக்கை சட்டத்திற்குப் புறம்பானது என்றும் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர், கவலைக்குரிய இந்த நடவடிக்கை உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இப்பொருள் குறித்து ஏற்கனவே தாம் கடந்த 24.1.2022 அன்று எழுதிய கடிதத்தில், 2018-ஆம் ஆண்டிற்கு முன்னர் சிறைப்பிடிக்கப்பட்ட 125 பழுதுபார்க்க இயலாத நிலையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை வெளிப்படையான முறையில் அகற்றுவதற்கான முயற்சிகளை இறுதி செய்யுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தி பிரதமர் அவர்களுக்கும், மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் கோரிக்கை வைத்திருந்ததையும், அதில், 2018-ஆம் ஆண்டிற்குப் பிறகு சிறைப்பிடிக்கப்பட்ட 75 படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை இலங்கை கடற்படையினர் விரைவில் விடுவிக்க உறுதி செய்ய வேண்டுமென்றும் அந்தக் கடிதத்தில் தான் கேட்டுக் கொண்டிருந்திருந்ததையும் தமிழ்நாடு முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, இந்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம் 28-1-2022 தேதியிட்ட மின்னஞ்சலில், இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அறிவிக்கப்பட்ட மீன்பிடிப் படகுகள் ஏலத்தை இலங்கைத் தரப்பு தொடராது என்றும் உறுதியளித்திருந்ததாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேற்குறிப்பிட்ட நோக்கத்திற்காக இலங்கை செல்லவிருந்த அதிகாரிகளின் உத்தேசப் பயணத் திட்டத்திற்கு இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகம் இசைவாணை வழங்கியுள்ளதுடன், அப்பயணத்திற்கான புதிய தேதிகளை இறுதி செய்யுமாறும், இலங்கைத் தரப்பிடமிருந்து அதற்கான ஒப்புதலைப் பெற்று, விரைவில் (குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே) அதைத் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், தமிழக அரசு முன்மொழிந்த தேதிகள் ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில், இந்தப் பயணத்திற்கான திருத்தப்பட்ட தேதி 1-3-2022 முதல் 6-3-2022 வரை என்று உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்
இந்தச் சூழ்நிலையில், இலங்கை அரசு தான் அளித்த வாக்குறுதிக்கு மாறாக, எந்தவிதமான ஆலோசனையுமின்றி தொடர்ந்துள்ள ஏல நடவடிக்கை, இதற்குத் தீர்வு காணும் நோக்கத்துடன் செயல்பட்டுவரும் இந்தியத் தூதரகம் மற்றும் தமிழக அரசின் முயற்சிகளை தடம் புரளச் செய்வதாக அமையும் என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இந்த மீட்க முடியாத நிலையில் உள்ள மீன்பிடிப் படகுகள் உரிய நீதித் துறை நடைமுறைகளைப் பின்பற்றி, பல்வேறு இலங்கை நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது என்றும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலே கூறப்பட்ட காரணங்களைக் கருத்தில் கொண்டு, இலங்கையால் முன்மொழியப்பட்ட ஏலத்தைத் தடுத்து நிறுத்திடவும், 2018-ஆம் ஆண்டிற்கு முன்னர் சிறைபிடிக்கப்பட்ட 125 பழுது பார்க்க இயலாத நிலையில் உள்ள தமிழகப் படகுகள் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்பார்வையிட அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்களின் உத்தேசப் பயணத்திற்கு இலங்கை வெளியுறவு அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெறவும் கேட்டுக் கொண்டுள்ள முதலமைச்சர் அவர்கள், 2018-க்குப் பிறகு சிறைப்பிடிக்கப்பட்டு, இலங்கையின் பல்வேறு கடற்படைத் தளங்களில் நிறுத்தப்பட்டுள்ள 75 படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை விடுவிக்கவும் பிரதமர் அவர்கள் அவசரமாகத் தலையிட வேண்டுமென்றும் இதன்மூலம் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.