இலங்கை கடற்படையால் தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்கள் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், காசாக்குடி மேடு மீனவர் கிராமத்தைச்
சேர்ந்த வைத்தியநாதன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், காரைக்கால் மற்றும்
மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 30ஆம் தேதி காரைக்கால்
மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த
நிலையில் கோடியக்கரைக்கு தென் கிழக்கே மீனவர்கள் நேற்று மீன் பிடித்துக்
கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி
மீன் பிடித்ததாகக் கூறி துப்பாக்கி முனையில் மீனவர்களைக் கைது செய்தனர்.
மேலும், படையில் இருந்த கீழக்காசாக்குடிமேடு சேர்ந்த கணேசன், காரைக்கால் மேடு சேர்ந்த பிரேம்குமார், தருமன், இளையராஜா, இராமன், மயிலாடுதுறை மாவட்டம் சின்னங்குடியைச் சேர்ந்த தினேஷ், வீரா, தரங்கம்பாடியைச் சேர்ந்த ராமநாதன், விக்னேஷ், ஜெகதீஸ், சந்தீஸ் குமார் நாயக்கர் குப்பத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் ஆகிய 12 மீனவர்களைக்
கைது செய்து, அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். இதனை
அடுத்து இலங்கை பருத்தித்துறை துறைமுகத்திற்கு மீனவர்களையும், படகையும் அழைத்து
சென்ற இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீன்பிடி தடைக்காலம் முடிந்த சில நாட்களில் காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களை மீட்டுத் தருமாறு கீழகாசாக்குடி மேட்டை சேர்ந்த கிராம பஞ்சாயத்தார்கள், காரைக்கால் மாவட்ட ஆட்சியர், மீன்வளத் துறை மற்றும்
புதுச்சேரி அரசுக்குகோரிக்கை விடுத்துள்ளனர்.
-ம.பவித்ரா







