ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியின் போது, முதல் முறையாக குழந்தை முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2020ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதையடுத்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் கடந்த வருடம் அகழாய்வு பணிகள் தொடங்கியது. இந்த அகழாய்வு பணியில் 100க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், தங்க நெற்றி பட்டயம், சங்க கால வாழ்விடம் பகுதிகள், வெண்கலத்தால் ஆன நாய் உருவம், மான், ஆடு, நீர்கோழி, மீன் பிடிக்க பயன்படும் மீன் தூண்டில் முள், மரத்தால் ஆன கைப்பிடி கொண்ட கத்தி, இரும்பு வாள் என ஏராளமான பொருட்கள் கிடைத்தது. இந்த அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமுக்கள் தாழிகளை தற்போது ஆவணப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிறிய முதுமக்கள் தாழி திறக்கப்பட்டது. அதில் ஆய்வாளர்களை ஆச்சரியமூட்டும் விதமாக நான்கு வளையங்களைக் கொண்ட இந்த வெண்கல வளையல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முதுமக்கள் தாழி 30 செ.மீ அகலம் மற்றும் 58 செ.மீஉயரம் கொண்டது. இது வளைந்த மற்றும் விரல் தடம் பதித்த வாய்ப்பகுதி கொண்டதாக இருந்தது. இச்சிறிய அளவிலான ஈமத்தாழியில் இரண்டு மூன்று ஈமப்பொருட்களே வைக்கப்பட்டிருந்தது. இதன் உள்ளே மிகச்சிறிய அளவிலான மண்டை ஓட்டின் எலும்பு மற்றும் கை எலும்பு கிடைத்தது.
இதில் கண்டுபிடிக்கப்பட்ட வளையல்களானது 3.5 செ.மீ விட்டமும், 0.2 செ.மீ கன அளவும், 22 கிராம் எடையும் கொண்டு அளவுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து கொள்ளும் வடிவில் நான்கு வளையங்களைக் கொண்டதாக உள்ளது. இந்த வளையல் உயர் அளவிலான வெள்ளீயம் கலந்த வெண்கல வளையல்கள் ஆகும். ஈமத்தாழி, மண்டை ஓடு, வளையல்கள் ஆகியவற்றின் அளவைக் கொண்டு இது 5 முதல் 8 வயது வரையிலான குழந்தையுடையதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
மற்றொரு முதுமக்கள் தாழியில் உயர் அளவிலான வெள்ளீயம் கலந்த இரண்டு வெண்கல காப்பு 2 மீ ஆழத்தில் கிடைத்தது. இந்த முதுமக்கள் தாழியில் குவளை, கிண்ணம், தட்டு, பிரிமனை போன்ற பல ஈமப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. ஈமத்தாழியின் உள்ளே மண்டை ஓடு, கைகால் எலும்புகள் உடைந்த நிலையில் கிடைத்தது. இதன் உள்ளே நான்கு ஈமப்பானைகள், 22 செ.மீ நீளமுள்ள இரும்பாலான குறுவாள், 5.5செ.மீ விட்டமும், 0.5செ.மீ கன அளவும், 24 கிராம் எடையும் கொண்ட இரண்டு காப்பு வடிவிலான வளையல்கள் ஆகியவை வைக்கப்பட்டிருந்தது. இதுவும் அளவுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து கொள்ளும் வடிவில் உருவாக்கப்பட்டிருந்தது. விரைவில் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
- பி.ஜேம்ஸ் லிசா