மநாதபுரம் அரசு விழாவில் மாவட்ட ஆட்சியரை கீழே தள்ளிவிட்ட விவகாரத்தில் எம்.பி. நவாஸ்கனியின் உதவியாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பங்கேற்ற
விளையாட்டு வீரர்களுக்கு பரிசளிப்பு விழா ராமநாதபுரத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்க நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி வருவதற்கு முன்பாகவே, அமைச்சர் ராஜகண்ணப்பன் விழாவை தொடங்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நவாஸ்கனி, அமைச்சர் ராஜகண்ணப்பனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது சமரசம் செய்ய முயன்ற மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரனை, ஆதரவாளர் கீழே தள்ளி விட்டதால் பரபரப்பு நிலவியது.
தம்மை கீழே தள்ளிவிட்ட கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, எஸ்பி தங்கத்துரையிடம், ஆட்சியர் விஷ்ணுசந்திரன் புகார் அளித்தார். இந்த பிரச்னை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எம்பி நவாஸ்கனி, முன்கூட்டியே விழா நடத்தி முடித்தது குறித்து ஆட்சியர் உரிய விளக்கம் அளிக்காததால், தலைமை செயலாளரிடம் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார் .
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரனை கீழே தள்ளிவிட்ட விவகாரம் தொடர்பாக மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார் கொடுத்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அரசு விழாவில் அத்துமீறி நுழைந்து ஆட்சியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் எம்.பி. நவாஸ்கனி உதவியாளர் விஜயன் மீது வழக்குப்பதிவு செய்து, தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா









