வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அதன்படி ஏற்கனவே நடந்து முடிந்த ஒருநாள் தொடரை வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து இந்தியா – வங்கதேசம் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் மைதனத்தில் கடந்த டிசம்பர் 14ம் தேதி தொடங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி 404 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆல்-அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் இரண்டாவதாக களமிறங்கிய வங்காளதேச அணி, இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது. இறுதியாக, 55.5 ஓவர்களில் 150 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில், குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளும், முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர்.
பின்னர் இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி 258 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. ஷுப்மன் கில் மற்றும் புஜாரா அதிரடியாக விளையாடி சதமடித்தனர். தொடர்ந்து 513 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. 4வது நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் குவித்தது.இதையடுத்து இறுதி நாளான இன்று, ஆட்டம் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் வங்கதேச அணி 324 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.