கோவையில் கொலை வழக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட கைதி காவலர்களை துப்பாக்கியால் சுட்டு கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சத்தியபாண்டி என்பவர் கோவையில் தங்கி கூலிப்படையாக செயல்பட்டு வந்தார். கடந்த 2020ஆம் ஆண்டு இந்து முன்னணி பிரமுகர் பிஜு என்பவரின் கொலை வழக்கில் சத்தியபாண்டி கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியில் வந்தார்.
இந்நிலையில், சத்தியபாண்டியை மற்றொரு கும்பல் முன்விரோதம் காரணமாக பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் பிப்ரவரி மாதம் துப்பாக்கியால் சுட்டும், அறிவாளாலும் வெட்டியது. அதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். சத்தியபாண்டி கொலை வழக்கில் கோவை ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதையும் படிக்க: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நடத்தை விதிமீறிவிட்டார் ! ஆணையத்திற்கு அதிமுக வழக்கறிஞர் கடிதம்
இந்நிலையில், காஜா உசேன், ஆல்வின், சபூல்கான் ஆகியோர் சென்னை அரக்கோணம் நீதிமன்றத்தில் கடந்த மாதம் சரணடைந்தனர். இச்சம்பவத்தில் மூளையாக செயல்பட்டு வந்த சஞ்சய்ராஜா என்பவர் தலைமறைவாக இருந்த நிலையில், போலீஸார் கோவை மற்றும் கர்நாடகப் பகுதிகளில் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இதையடுத்து, சஞ்சய் சென்னை எக்மோர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அதைத்தொடர்ந்து, கோவை ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் சஞ்சய் ராஜாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். கொலை சம்பவத்திற்கு பயன்படுத்திய துப்பாக்கியை தான் எடுத்து தருவதாக சஞ்சய் கூறியுள்ளார். இதையடுத்து, துப்பாக்கியை எடுக்க காவலர்களை கோவை கரட்டுமேடு பகுதியில் உள்ள முருகன் கோவில் அருகில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, அவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணலீலாவை சுட்டுள்ளார்.
அப்போது, ஆய்வாளர் கிருஷ்ணலீலா தப்பியோடி மரம் ஒன்றின் பின்னால் மறைந்து அதிர்ஷ்டவசமாக தப்பித்தார். இதையடுத்து, அருகில் இருந்த உதவி ஆய்வாளர் சந்திரசேகர் தற்காப்பிற்காக சஞ்சய்ராஜாவின் இடது காலில் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதையடுத்து, சஞ்சய் தவறி விழுந்த நிலையில், காவலர்கள் அவரைப் பிடித்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது அங்கு சஞ்சய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-ம.பவித்ரா








