ஒடிசாவில் அமைச்சர் நபா தாஸ் மீது மர்ம நபர் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதால் பதற்றமான சூழல் ஏற்ப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் பிஜூ ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சியின் தலைவரான நவீன் பட்நாயக் 5 முறைக்கு மேல் அங்கு முதலமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார்.
நவீன் பட்நாயக் தலைமையிலான ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராகவும், பிஜு ஜனதாதள கட்சியின் மூத்த தலைவராகவும் இருப்பவர் நபா தாஸ். இன்று அவர் ஜார்சுகுடா மாவட்டம் பிரஜாராஜ் நகர் பகுதியில் பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவதற்காக காரில் சென்றார். காரில் இருந்து இறங்கும்போது நபா தாஸ் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.
பதற்றமடைந்த பொதுமக்களும் , காவல்துறையினரும் துப்பாக்கி குண்டடிபட்ட ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நபா தாஸின் மார்பில் குண்டு பாய்ந்துள்ளதால் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பலத்த பாதுகாப்பையும் மீறி நடந்த இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. உதவி சப் இன்ஸ்பெக்டர் தான் அமைச்சரின் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அருகில் உள்ளவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து அவரிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
– யாழன்







