தேஜாவு மேஜிக் மூலம் தொழில் முதலீடு வாடிக்கையாளர்களை வசியம் வைத்து ஏமாற்றியிருக்கிறது ஒரு பிரபல நிறுவனம்……அது எந்த நிறுவனம்?…. அந்த நிறுவனத்தின் நம்பகத்தன்மை வாய்ந்த தேஜாவு மேஜிக் என்றால் என்ன?…விரிவாக பார்க்கலாம்……
நவீன நாகரீக வளர்ச்சி நடைமுறையில் சாத்தியப்பட்டு வந்தாலும், நடப்பவை அனைத்தும் நல்லவை என நம்பும் நம்மில் சிலர், இன்னும் ஏமாளியாகவே இருக்கிறார்கள் என்பதற்கு சான்றாக, சென்னையில் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆருத்ரா, ஐஎப்ஃசி உள்ளிட்ட நிறுவனங்களின் பல்லாயிரக்கணக்கான நிதி மோசடியை கண்கூடாக அறிந்தும் கூட, தீரா ஆசையால் திகட்டாத வருமானம் வேண்டி, மேலும் ஒரு மோசடி கும்பலிடம் லட்சக்கணக்கான மக்கள் சிக்கி தவித்துள்ளார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஹிஜாவு அசோசியேட்ஸ் எனும் இந்த நிறுவனம், தங்களிடம் முதலீடு செய்யும் நபர்களுக்கு மாதா மாதம் 15 சதவீதம் பே-அவுட் கொடுக்கப்படும் எனக் கூறி அதனை சரிவர செலுத்தியும் வந்துள்ளது.
இதை நிரந்தரம் என நம்பிய சிலர், தங்களது உறவினர்கள், நண்பர்கள் என பலரை, தங்களையும் அறியாமல் இந்த மாய வலையில் சிக்க வைத்துள்ளனர். ஆனால், முதலீடுகளுக்கு உண்டான பே-அவுட் தொகையை கடந்த சில மாதங்களாக கொடுக்க இயலாத அந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு சரியான விளக்கத்தையும் கொடுக்கவில்லை.
மேலும், ஹிஜாவு அசோசியேட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் சவுந்தர்ராஜன் மற்றும் அவரது மகன் அலெக்சாண்டர் சவுந்தர்ராஜன் ஆகியோர், இங்கிருந்து தப்பித்து வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இத்தனை சம்பவங்கள் அரங்கேறிய பின்பு, இதில் சம்பந்தபட்ட அந்நிறுவனத்தின் நிர்வாக உறுப்பினர்களில் ஒருவரான சுரேஷ் என்பவர், இதுகுறித்து தாம் புகார் அளிக்க செல்வதாகவும், அனைவரும் புகார் அளிக்க வருமாறும் மெசேஜ் செய்துள்ளார். அதனை கண்டு அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் சிலர், பதற்றத்துடன் சென்னை அசோக் நகரை நோக்கி படையெடுத்ததை அடுத்து அங்குதான் சிக்கினார் சுரேஷ்.
அப்போது தான், வாடிக்கையாளர்கள் மட்டுமல்ல; நிர்வாக உறுப்பினர்களாக இருக்கும் சிலரும் இந்த மோசடியில் சிக்கியது தெரியவந்துள்ளது.
மலேசியாவின் முன்னாள் பிரதமருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம், பல்வேறு வகையில் நலத்திட்ட உதவிகள் என நட்சத்திர விடுதிகளில் தங்கள் சாதனைகளை திரையிட்டு காட்டி நம்பவைத்ததாகவும் கூறப்படுகிறது.
ஆசை கொண்ட மக்களின் ஆழ்மனதில் ஒரு நம்பிக்கையை விதைத்து, பல பேரிடம் நிதி மோசடியில் ஈடுபடும் இதுபோன்ற நிறுவனங்களின் பசிக்கு தீனியாக மாறும் மிடில் கிளாஸ் மாதவன்கள் இருக்கும் வரை, ஏமாற்றம் என்பது எள்ளளவும் மாறாது என அறிவுரை கூறிய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், அந்நிறுவனத்தின் மீது தகுந்த ஆவணங்களுடன் புகார் கொடுக்க சொல்லி அறிவுறுத்தி வாடிக்கையாளர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
- நாகராஜன்