படப்பிடிப்புக்கு அனுமதி: முதலமைச்சருக்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி

திரைப்படப் படப்பிடிப்புகள், 100 நபர்கள் மட்டும் பணிபுரியும் வகையில் நடத்த அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்ததற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு…

திரைப்படப் படப்பிடிப்புகள், 100 நபர்கள் மட்டும் பணிபுரியும் வகையில் நடத்த அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்ததற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் 100 நபர்கள் மட்டும் பணிபுரியும் வகையில் நடத்த அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் என்.இராம சாமி என்கிற முரளி இராமநாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து மக்களை காப்பாற்ற, அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து செயல்பட்டு வருவது எல்லோருக்கும் தெரியும். இந்த சூழ்நிலையில் தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்பு மற்றும் படத்திற்கு பிந்தைய வேலைகளை துவக்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வைத்து தமிழக முதல்வரிடம், தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைத்து மனு கொடுத்தோம். அதன் முதல்படியாக தமிழக முதல்வர் 100 நபர்களுக்குள் குழுவினரை வைத்து படப்பிடிப்பு துவக்கலாம். படப்பிடிப்பிற்கு பிந்தைய வேலைகளையும் நடத்தலாம் என ஆணை பிறப்பித்துள்ளார்.

தமிழக முதல்வருக்கு எங்களது கோடானுகோடி நன்றிகள். தமிழக அரசு அறிவித்துள்ள சமூக இடைவெளியை கடைபிடித்து சானிடைசரை உபயோகப்படுத்தி, தடுப்பூசி போட்டுக்கொண்டு படப்பிடிப்புகளை நடத்திட வேண்டு மாய் தயாரிப்பாளர்களையும் படக்குழுவினரையும் கேட்டுக்கொள்கிறோம். மற்ற கோரிக்கைகளையும் தமிழக முதல்வர் நிறைவேற்றித்தருவார் என்ற நம்பிக்கையோடு மீண்டும் படப்பிடிப்புகளை நம்பிக்கையோடு துவக்குவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.