சென்னையில் பெண் சித்த மருத்துவர் கொலை செய்துவிட்டு 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை தி.நகர் ராகவைய்யா சாலையை சேர்ந்தவர் மலர்கொடி. சித்த மருத்துவரான இவர், தனது சகோதரர் ஆனந்தகுமாருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2002ம் ஆண்டு மே மாதம் வீட்டில் மர்மமான முறையில் மலர்கொடி கொலை செய்யப்பட்டார். விசாரணையில் மலர் கொடி வீட்டில் வேலை செய்த அழகர்சாமி என்பவர் தனது சகோதரர் ராமகிருஷ்ணன் மற்றும் நண்பர் சக்திவேலுடன் சேர்ந்து மலர்கொடியை கொலை செய்து தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதை தொடர்ந்து போலீசார் அப்போது அழகர்சாமி மற்றும் அவரது நண்பர் சக்திவேலை கைது செய்தனர். ஆனால் இந்த வழக்கில் ராமகிருஷ்ணன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். போலீசார் ராமகிருஷ்ணனை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. இதனால் கடந்த 20 ஆண்டுகளாக ராமகிருஷ்ணன் தலைமறைவாக இருந்து வந்தார்.
இதற்கிடையே ராமகிருஷ்ணன் திண்டுக்கல் மாவட்டம் சொந்த ஊரான கொல்லம்பட்டியில் பாஸ்ட் புட் கடை நடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற தனிப்படை போலீசார் ராமகிருஷ்ணனை அதிரடியாக கைது செய்தனர்.
ராமகிருஷ்ணனிடம் நடத்திய விசாரணையில், தனது சகோதரர் அழகர்சாமி கொலை செய்யப்பட்ட சித்த மருத்துவர் மலர்கொடி வீட்டில் வேலை செய்து வந்தார். அவரிடம் அதிகளவில் பணம் இருந்ததை ராமகிருஷ்ணன் கவனித்துள்ளார். பிறகு தனது சகோதரர் அழகர்சாமி மற்றும் நண்பர் சக்திவேலுடன் சேர்ந்து திட்டமிட்டு சித்த மருத்துவரை கொலை செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தாகவும், பணத்துடன் ராமகிருஷ்ணன் மட்டும் கேரளாவுக்கு தப்பி ஓடியதாகவும் கூறினார்.
சித்த மருத்துவர் கொலை வழக்கில் 20 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து பாஸ்ட் புட் நடத்தியவரை போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.