தமிழ்நாட்டில் அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
மருத்துவ மாணவர் கலந்தாய்வை நடத்தும் மருத்துவக் கல்லூரி இயக்ககம் 2023 -24 ஆம் ஆண்டுக்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளில் அரசு, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயித்து அறிவித்துள்ளது.
அதன்படி, எம்.பி.பி.எஸ் படிப்புக்கு 13 ஆயிரத்து 610 ரூபாயாக இருந்த ஆண்டுக் கட்டணம், 18 ஆயிரத்து 93 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், பி.டி.எஸ் எனப்படும் பல்மருத்துவப் படிப்புக்கான ஆண்டுக் கட்டணம் 11 ஆயிரத்து 610 ரூபாயில் இருந்து 16 ஆயிரத்து 73 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : மகாராஷ்டிராவில் டயர் வெடித்து விபத்துக்குள்ளான பேருந்து – தீப்பற்றி எரிந்ததில் 26 பேர் உயிரிழப்பு!!
தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு எம்பிபிஎஸ் ஒதுக்கீட்டு இடங்களை பொருத்தவரை குறைந்தபட்ச கட்டணமாக வேலூர் சி.எம்.சி. கல்லூரியில் 53 ஆயிரம் ரூபாயாகவும், பிற கல்லூரிகளில் அதிகபட்சமாக நான்கரை லட்சம் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிடிஎஸ் படிப்புக்கு இரண்டரை லட்சம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ மாணவர்களின் நூலக பயன்பாடு மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை விரிவுபடுத்தியிருப்பதால் கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







