30.6 C
Chennai
April 19, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா

குடியரசு தலைவர் மாளிகையின் சிறப்பம்சங்கள்!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி தலைமைப் பதவியை முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் வகிக்கிறார். அவர் வசிக்கும் குடியரசு தலைவர் மாளிகை, பெயருக்கேற்றார் போல் பிரமாண்டம் நிறைந்த பெரிய மாளிகையாக உள்ளது. பழமையும், புதுமையும் கலந்த கட்டிடக் கலைக்கு இது எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

கண்களுக்கு விருந்தாக, இயற்கை எழிலுடன் பின்னி பிணைந்துள்ள குடியரசு தலைவர் மாளிகை, 330 ஏக்கரில் அமைந்துள்ளது. மாளிகையில் மொத்தம் 340 அறைகளும், 4 தளங்களும் உள்ளன. இரண்டரை கிலோமீட்டர் நீளத்தில் நடைபாதைகள், 190 ஏக்கரில் பசுமை போர்வையுடன் தோட்டங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளன. சர் எட்வின் லுட்யென்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரின் படைப்பாற்றலுடன் 1929-ம் ஆண்டு ஆங்கிலேய அரசால் இந்த மாளிகை உருவானது. நூற்றுக்கணக்கில் கொத்தனார்கள், தச்சர்கள், கலைஞர்கள், சிற்ப வல்லுநர்கள் உட்பட ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் கடின உழைப்பால் உயர்ந்த மாளிகை இது.பாரசீகத்தின் ஆட்சியாளர் ஃபத் அலி ஷா, புலியை வேட்டையாடும் தோல் ஓவியம் முப்பரிமாண முறையில் வரையப்பட்டுள்ளது. பல விதமான கலைநயம் மிகுந்த பொருட்கள், நினைவலைகளை தூண்டும் பரிசு பொருட்கள், வியட்நாம் அரசால் இரண்டாவது குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்ட ஆயிரம் கரங்கள் கொண்ட புத்தரின் சிலை என பலவிதமான கலைப்பொருட்களின் பட்டியல் நீள்கிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கவர்னர் ஜெனரலாக இருந்த சி.ராஜகோபாலாச்சாரி, முதல் குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத் தொடங்கி அடுத்து வரும் குடியரசு தலைவர்கள் என, இங்கிருந்து தான் அவர்கள் இந்திய ஜனநாயகத்தின் காப்பாளனாக பணியாற்றுகின்றனர்.

பிரமாண்டமான இம்மாளிகையில் பலமுறை பார்வையாளராக ஆங்கிலேய வைஸ்ராய்களை சந்திக்க சென்றுள்ளார் தேசத்தந்தை மகாத்மா காந்தி. அப்போது ஆங்கிலேய ஆட்சியில் உப்புக்கு வரி விதித்த நடவடிக்கைக்கு, எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், தனக்கு வழங்கப்பட்ட தேநீரில் கலந்து பருகுவதற்காக உப்பை எடுத்துச் சென்றார் காந்தி. 1931ம் ஆண்டு, மகாத்மா காந்திக்கும் – இர்வினுக்கும் இடையேயான, காந்தி – இர்வின் ஒப்பந்த வடிவம் பெற்றது இம்மாளிகையில் தான்.

குடியரசு தலைவருக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து தான் மத்திய, மாநில அரசுகள் சட்டமியற்றுதல், நியமனங்கள் என அரசியலும், ஆட்சியியலும் கலந்த நடவடிக்கைகள் தொடங்கும்.

இங்குள்ள அசோகா மண்டபத்தில் பல முக்கிய நிகழ்வுகளும், தர்பார் மண்டபத்தில் பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிகளும், படை வீரர்களை கெளரவிக்கும் மற்றும் பதக்கம் அணிவிப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

குடியரசுத் தலைவர் மாளிகையை பொதுமக்களும் கண்டுகளிக்க வேண்டும் என முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி விரும்பினார். அதன்படி, 2012-ம் ஆண்டு முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். 2014-ம் ஆண்டில் திறக்கப்பட்ட அருங்காட்சியகம், கலை, கலாசாரம், பாரம்பரியம் மற்றும் வரலாற்றில் ஆர்வமுள்ளவர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் இடமாகும். இது, குடியரசுத் தலைவர் மாளிகையில் பல்வேறு கால கட்டங்களில் நடந்த வரலாற்றை நம் கண் முன்னே நிறுத்தும்.

இங்கு புகழ்பெற்ற தோட்டங்களான முகலாய தோட்டம், மூலிகைத் தோட்டம், இசைத் தோட்டம் மற்றும் ஆன்மிக தோட்டம் இயற்கை எழிலுடன் உள்ளது. வட்ட வடிவ தோட்டம், செவ்வக தோட்டம், நீள தோட்டம் என மூன்று வடிவங்களிலும் தோட்டங்கள் உள்ளன. இவற்றை நீரூற்றுகளும், அழகான மலர்களும் மெருகூட்டுகின்றன.

குடியரசுத் தலைவர் மாளிகையில் விருந்தினர்களுக்கான தங்கும் இடவசதிகள் உள்ளன. குடியரசுத் தலைவரின் நேரடி பரிந்துரையின்பேரில் இந்த அறைகளில் தங்க அனுமதி வழங்கப்படும் பணியாளர்களுக்கு குடியிருப்புகள், பொழுதுபோக்கு மன்றம் என முழுமையான பசுமைக் குடியிருப்பாக குடியரசுத் தலைவர் மாளிகை விளங்குகிறது

இரா.தங்கபாண்டியன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading