தென்காசி, ஐந்தருவி பகுதியில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை விரட்ட விவசாயி ஒருவர் தன் சொந்த முயற்சியில் துப்பாக்கியை தயாரித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் வசித்து வரும் பெரும்பாலான மக்களின் முக்கிய பொருளாதர
ஆதாரமாக விளங்கக்கூடியது விவசாயம். இந்த விவசாயத்தை நம்பி தென்காசி மாவட்டத்தில் லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்களது குடும்பங்களை நடத்தி வரும் நிலையில், தற்போது இந்த விவசாயமானது வனவிலங்குகளின் வேட்டைக்கு இறையாகி வருவதால் தென்காசி மாவட்ட விவசாயிகள் பெரும் வேதனைக்கு உள்ளாகி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள், காட்டுப் பன்றிகள், குரங்கினங்கள் உள்ளிட்டவைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வரும் நிலையில், வனவிலங்குகளின் அட்டூழியத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், குற்றாலம் பகுதியில் ஏராளமான மா மற்றும் தென்னை விவசாயிகள் உள்ள நிலையில், இந்தப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து தேங்காய் மற்றும் மாங்காய் உள்ளிட்ட விவசாய பயிர்களை பறித்து குரங்குகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதனை கட்டுப்படுத்த வனத்துறையினர் எந்தவிதமான நடவடிக்கையும்
எடுக்காத நிலையில், அப்பகுதியில் உள்ள விவசாயிகள் வனத்துறையினரை நம்பாமல்
தாங்களாகவே கற்களை கொண்டு எறிந்தும், ஒலி எழுப்பியும் குரங்குகளை விரட்டும்
முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குற்றாலம் ஐந்தருவி பகுதியை சேர்ந்த சுடலை என்ற விவசாயி, தனது வயது முதிர்வின் காரணமாக கற்களை கொண்டு வீசி எறியவோ, குரல் எழுப்பியோ குரங்குகளை
விரட்ட முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்த நிலையில், வேறு ஏதாவது
செய்து குரங்குகளை விரட்ட வேண்டும் என தீவிர சிந்தனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அப்பொழுது, தனது வீட்டில் இருந்த பிளாஸ்டிக் பைப்புகள் மற்றும் கேஸ் அடுப்பை
பற்றவைக்கும் லைட்டர் உள்ளிட்டவை பயன்படுத்தி துப்பாக்கி போன்று ஒன்றை
செய்யும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ள நிலையில், அடுத்தடுத்து இரண்டு மூன்று முறை தோல்வியில் முடிந்ததால் மிகப்பெரிய வேதனையடைந்துள்ளார்.
இருந்தபோதும் துவண்டுவிடாமல், விடா முயற்சியில் ஈடுபட்டு துப்பாக்கி போன்ற ஒரு
அமைப்பை தயார் செய்து, அதில் கற்கள், பேப்பர், மனிதர்கள் பயன்படுத்தக்கூடிய
வாசனை திரவியங்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி துப்பாக்கி ஒன்றை தயாரித்து அதை வைத்து குரங்குகளை விரட்டும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறார்.
விவசாயின் இந்த முயற்சியானது அங்குள்ள அனைவரது பாராட்டுகளையும், வியப்பையும்
ஏற்படுத்தியுள்ள நிலையில் விவசாயி ஒருவர் தான் பட்டு வந்த கஷ்டத்தை போக்க அயராது சிந்தனை செய்து எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லாத ஒரு துப்பாக்கியை தயாரித்து குரங்குகளை விரட்டி வரும் சம்பவம் விஞ்ஞானியை மிஞ்சிய விவசாயியாகவே
கருதப்பட்டுவருகிறது.