முழு அடைப்பில் விவசாயிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என திமுக விவசாய அணி மாநிலத் தலைவர் என்.கே.கே.பெரியசாமி அறிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் புதிய வேளாண் சட்டங்களை முழுவதுமாக ரத்து செய்யக் கோரி அகில இந்திய விவசாய கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு செப்டம்பர் 27 நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதுதொடர்பாக திமுக விவசாய அணி தலைவர் என்.கே.கே. பெரியசாமி வெளியிட்ட அறிக்கையில், முழு அடைப்பில் தமிழக விவசாயிகளும் விவசாய தொழிலாளர்களும் பொதுமக்களும், வியாபாரிகள், வணிகர்கள், அனைத்து சமூக அமைப்புக்கள் என அனைவரும் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

செப்டம்பர் 27ம் தேதி நடைபெறும் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் அமைதியான வழியிலான போராட்டம். இதனால் அத்தியாவசிய பணிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது என்கிற உறுதிமொழியோடு விவசாயிகள்-விவசாய தொழிலாளர்கள் பங்கேற்று போராட்டம் முழு வெற்றியடையும் விதமாக நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.







