விடைபெற்றார் டிஐஜி விஜயகுமார்! 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு! தேனி மின் மயானத்தில் உடல் எரியூட்டப்பட்டது!

அரசு மரியாதையோடு 21 குண்டுகள் முழங்க கோவை சரக டிஐஜி விஜயகுமாரின் உடல் தேனி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.  கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து…

அரசு மரியாதையோடு 21 குண்டுகள் முழங்க கோவை சரக டிஐஜி விஜயகுமாரின் உடல் தேனி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. 

கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்டார். இதனை அடுத்து டிஐஜி விஜயகுமாரின்  உடலுக்கு கோவை அரசு மருத்துவமனையில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர் சந்தித்த அவர், டிஐஜி விஜயகுமார் மரணத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று தெரிவித்தார்.

 கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், டிஐஜி விஜயகுமாரின் உடல் அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. அப்போது டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.டி.ஜி.பி முன் விஜயகுமாரின் குடும்பத்தினர் கதறி அழுதனர். அப்போது விஜயகுமாரை நம்பிதானே இருந்தோம் என அவரது தாய் ராஜாத்தி கதறி அழுதது அனைவரையும் கலங்க வைத்தது.

டிஜிபி சங்கர் ஜிவாலுடன், காவல் துறை உயர் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் மற்றும் தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் ஆகியோரும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதோடு, மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட மாவட்ட எஸ்.பி க்களும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அப்போது  ஐ.பி.எஸ் அதிகாரி துரை கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

இதே போன்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணக்குமார் ஆகியோரும் டிஐஜி விஜயகுமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, அவரது பெற்றோருக்கும் ஆறுதல் கூறினர்.

இவர்களை தொடர்ந்து தேனியில் பள்ளி பருவத்தில் விஜயகுமாருடன் படித்த 20 க்கும் மேற்பட்ட அவரது பள்ளி நண்பர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். மேலும், பள்ளியில் அவருக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

இதனை அடுத்து துப்பாக்கி ஏந்திய 12 காவலர்கள் டிஐஜி விஜயகுமாரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தினர். அப்போது டிஜிபி சங்கர் ஜிவால் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து ஐ.ஜி க்கள், டி.ஐ.ஜி க்கள், எஸ்.பி க்கள் என காவல் துறை உயர் அதிகாரிகள் பலர் சல்யூட் அடித்து தங்கள் மரியாதை செலுத்தினர்.

பின்னர் டிஐஜி விஜயகுமாரின் உடலை காவல் துறை உயர் அதிகாரிகளுடன் சேர்ந்து டிஜிபி சங்கர் ஜிவால்சிறிது தூரம் தோளில் சுமந்தவாறு சென்றார். இதனை அடுத்து வாகனத்தில் வைக்கப்பட்ட உடல் சுமார் 6 கி.மீ தூரம் ஊர்வலமாக எடுத்துச் செல்ல்ப்பட்டது. பொம்மையகவுண்டன்பட்டி, அல்லிநகரம் வழியாக  நடைபெற்ற இந்த இறுதி ஊர்வலத்தில் 20 க்கும் மேற்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகள் பங்கேற்று உடலுடன் நடந்து சென்றனர். 

சாலையின் இரு ஓரங்களிலும் காத்திருந்த தேனி மாவட்ட பொது மக்கள் டிஐஜி விஜயகுமாரின் உடலுக்கு மரியாதை செலுத்தினர். இறுதியாக தேனி மின் மயானத்திற்கு டிஐஜி விஜயகுமாரின் உடல் கொண்டு செல்லப்பட்டது. டிஐஜி விஜயகுமாரின் உடலை விஜயகுமாரின் தந்தை, மனைவி இறுதியாக பார்த்து கண்ணீர் விட்டு அழுதனர்.

பின்னர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்ட பின் டிஐஜி விஜயகுமாரின் உடலுக்கு தமிழக காவல்துறை சார்பில் 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த காவல்துறை இறுதி மரியாதை நிகழ்வில் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலும் பங்கேற்றார். அதோடு 6 கி.மீ தூரம் இறுதி ஊர்வலத்தில் நடந்து வந்த ஐ.ஜி-க்கள், டி.ஐ.ஜி-க்கள், எஸ்.பி-க்கள் என 20 க்கும் மேற்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இதனை அடுத்து தேனி மின் மயானத்தில் விஜயகுமாரின் உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெற்ற பின் அவரது உடல் எரியூட்டப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.