வருடத்துக்கு 250 திரைப்படங்களுக்கு மேல் ரிலீஸானாலும் சில படங்கள் மட்டுமே அடடா என்றும் ஆஹா என்றும் வியக்க வைக்கும். அப்படி ஆச்சரியங்களை அள்ளி வைத்த படங்களில் ஒன்று, ’சுப்பிரமணியபுரம்’!
சசிகுமார் என்ற இயக்குநரை, நடிகரை, தயாரிப்பாளரை அறிமுகப்படுத்திய படம் அது. அந்த ’சுப்பிரமணியபுரம்’ படம் வெளியாகி இன்றோடு 13 வருடங்கள் ஆகிவிட்டன.
கடந்த 2008 ஆம் ஆண்டு இதே நாளில் வெளியாகி ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தப் படமான இதில், ஜெய், சசிகுமார், சமுத்திரக்கனி, ஸ்வாதி, கஞ்சா கருப்பு, இசை அமைப்பாளர் ஜேம்ஸ்வசந்தன் என அனைவருமே ரசிகர்களை மொத்தமாக வசப்படுத்தினார்கள். கூடவே ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிரும் எடிட்டர் ராஜா முகமதுவும்.

1980-களில் மதுரையில் லந்தாக திரியும் சில இளைஞர்களையும் உள்ளூர் அரசியல் புள்ளி, அவர்களைப் பயன்படுத்திக் கொள்வதையும் அதற்கிடையில் நடக்கும் உறவையும் துரோகத்தையும் அழுத்தமாக சொன்ன படம் சுப்ரமணியபுரம்.
எண்பதுகளை தத்ரூபமாக காட்டிய அந்தப் படத்தின் காட்சிகளும் ஜேம்ஸ் வசந்தனின், கண்கணிரண்டால் பாடலும்‘மரண பயத்தைக் காட்டிட்டான் பரமா’ என்பது போன்ற இயல்பான வசனங்களும் அந்த மதுரை பேச்சுவழக்கும் சுப்ரமணியபுரத்திற்கு இன்னும் உயிரூட்டின. அதுதான் அந்தப் படத்தின் வெற்றிக்கும் காரணம்.
அந்தப் படம் வெளியாகி இன்றோடு 13 வருடங்கள் ஆனதை அடுத்து, ரசிகர்கள் ட்விட்டரில் 13YearsOfSubramaniapuram என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர்.







