லட்சத்தீவில் கடலுக்கடியில் பவளப்பாறைகளுக்கு இடையே மெஸ்ஸியின் கட் அவுட்டை ரசிகர்கள் வைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை அர்ஜென்டினாவுக்கும், நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணிக்கும் இடையே நடைபெற உள்ளது.
இந்நிலையில் லட்சத்தீவில் உள்ள அர்ஜென்டினா ரசிகர்கள், அர்ஜென்டினா அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு வந்தால், பவளப் பாறைகளுக்கு நடுவே கடலில் மெஸ்ஸியின் பிரமாண்ட கட்அவுட்டை வைப்பதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி தற்போது லட்சத்தீவை சேர்ந்த அர்ஜென்டினா ரசிகர்கள் மெஸ்ஸியின் பிரமாண்ட கட்அவுட்டை கடலுக்கடியில் உள்ள பவளப் பாறைகளுக்கு இடையே வைத்துள்ளனர். கேரளாவில் ஆற்றிற்கு நடுவில் மெஸ்ஸி, நெய்மர், ரொனால்டோ கட் அவுட் வைத்த நிலையில் லட்சத்தீவு ரசிகர் ஒருபடி மேலே போய் கடலுக்கடியில் வைத்துள்ளனர்.
மெஸ்ஸி இதுவரை 11 கோல்களை அடித்துள்ளார். அர்ஜெண்டினாவிற்காக உலக கோப்பை போட்டிகளில் அதிக கோல்களை அடித்த வீரராக மெஸ்ஸி திகழ்கிறார். இந்த உலக கோப்பை கால்பந்து போட்டி தான் தனது கடைசி உலக கோப்பை என மெஸ்ஸி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.







