திருநின்றவூர் பெரிய காலனி பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ். இவர் விசிக திருநின்றவூர் நகர செயலாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி கோமதி 26வது வார்டு விசிக கவுன்சிலராகவும், திருநின்றவூர் நகராட்சி வரி விதிப்பு சேர்மானாக இருந்து வருகிறார்.
இவர்கள் இருவரும் காதலித்து திருமணமாகி 10 வருடத்திற்கு மேலான நிலையில் 4 ஆண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் கவுன்சிலர் கோமதிக்கு, ஆண் நண்பர் ஒருவருக்கும் கடந்த சில மாதங்களாக திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கணவர் ஸ்டீபன் ராஜ்க்கும், மனைவி கோமதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் கவுன்சிலர் கோமதி தனது ஆண் நண்பருடன் நடுகுத்தகை ஜெயராம் நகர் அருகே நின்று பேசி கொண்டிருந்ததாக கணவர் ஸ்டீபன் ராஜ்க்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ஸ்டீபன் ராஜ் மனைவி கோமதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே தகராறு முற்றியதில் ஆண் நண்பர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். அப்போது அவரது கணவர் ஸ்டீபன் ராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கோமதியை சரமாரியாக தலை, முகம், கழுத்து பகுதிகளில் வெட்டியுள்ளார்.
இந்த தாக்குதலில் கோமதியின் கை துண்டானது. இதனையடுத்து ரத்த வெள்ளத்தில் சரிந்த கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதன் பின்னர் அங்கிருந்து சென்ற கணவர் திருநின்றவூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் கணவர் ஸ்டீபனிடம் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.







