இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காவிரி டெல்டா பாசனத்தின் ஜீவநாடியாக திகழும் மேட்டூர் அணை, அதன் முழு கொள்ளள வான 120 அடியை நேற்றிரவு எட்டியது. கடந்த 2019-ம் ஆண்டிற்கு பிறகு மேட்டூர் அணை, அதன் முழு கொள்ளளவான 120 அடியை, 2 ஆண்டுகளுக்கு பிறகு எட்டியுள்ளது. அணைகட்டப்பட்ட 88 ஆண்டு கால வரலாற்றில் 41 வது முறையாக மேட்டூர் அணை 120 அடியை எட்டியுள்ளது.
இதனையடுத்து அணையின் வலது கரையில் காவிரி அன்னைக்கு, பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் மலர்களைத் தூவி வணங்கினர். மேட்டூர் அணையின் மின் சுரங்கபாதை வழியாக வினாடிக்கு 22ஆயிரம் கனஅடி நீரும், 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 2ஆயிரத்து 500 கனஅடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது. இதனையடுத்து காவிரிக் கரையோரம் உள்ள 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.







