தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் பூ விற்கும் பெண்களிடம் கூட மாமூல் வசூலிக்கின்றனர் என வி.கே.சசிகலா குற்றம்சாட்டியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதியில் புரட்சி பயணம் மேற்கொண்டுள்ள வி.கே.சசிகலா, தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஆட்சிக்கு வந்துவிட்டதால் 5 ஆண்டுகள் யாரும் எதையும் செய்ய முடியாது என்ற எண்ணத்தில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது என குற்றம்சாட்டினார். தி.மு.க.வின் கூட்டணியில் இப்போது தமிழ்நாட்டின் பெரும்பாலான கட்சிகள் இருக்கிறது. அதனால் அந்த கட்சிகள் எல்லாம் எதிர்த்து குரல் கொடுப்பதில்லை.
முதியோர் உதவித்தொகை, அம்மா உணவகம் உள்ளிட்ட ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு மூடிவருகிறது. மேலும் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவினர் வந்த பிறகு சிறுகடைகளை போட்டு தெருவோரத்தில் காய்கறிகள் கூட விற்க முடியாத நிலைமை உருவாகி விட்டதாக குறிப்பிட்டார்.
தட்டில் வைத்து பூ விற்பனை செய்ய கூட முடியவில்லை என மக்கள் சொல்வதை சுட்டிக்காட்டிய அவர், சென்ற இடங்களில் எல்லாம் திமுகவினர் மாமூல் கேட்கிறார்கள். பூ விற்பனை செய்பவர்களிடமும் மாமூல் கேட்பதாக புகார் வருகிறது என தெரிவித்தார். ஜெயலலிதா ஆட்சியில் இதுபோன்ற வசூல் வேட்டைகள் மாமூல் எல்லாம் கிடையாது என்பது அனைவருக்கும் தெரியும். அந்த நிலையை மீண்டும் கொண்டு வர வேண்டும்.
மேலும் தமிழ்நாட்டில் தற்போது, சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது. பெண்களுக்கு இப்போது பட்டப்பகலிலேயே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலைதான் உள்ளது. யார் ஆட்சியில் இருந்தால் நல்லது நடக்கும் என்பது மக்களாகிய உங்கள் கையில் தான் உள்ளது. வருங்காலம் நன்றாக இருக்கும். மக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் என கேட்டுக்கொண்ட வி.கே.சசிகலா, உங்களுக்காக நான் குரல் கொடுத்துக் கொண்டே தான் இருப்பேன் என தெரிவித்தார்.
-இரா.நம்பிராஜன்








