சீனவில் டென்செட் என்கிற தொழில்நுட்ப நிறுவனம் பாம் பேமெண்ட் என்ற புதிய பேமண்ட் முறையை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் ஸ்கேனர் முன் நமது உள்ளங்கையை காட்டினால் போதும் பணம் செலுத்திவிடலாம்.
கையில் பணம் எடுத்துச்சென்று பொருள் வாங்குவது தற்போது வழக்கொழிந்து வருகிறது. அனைவரும் ஜி பே, போன் பே என யூபிஐ ஆப்கள் மூலம் பணம் செலுத்த தொடங்கிவிட்டனர். அதிலும் ஒரு ரூபாய்க்கெல்லாம் ஜி பே செய்கிறார்கள் என கடை உரிமையாளர்கள் புலம்பும் அளவுக்கு பணப்பரிவர்த்தனை ஆன்லைன்மயம் ஆகி வருகிறது.
இந்தியாவில் யூபிஐ பேமண்ட் முறை வெற்றிகரமாக செயல்பட்டு வருவது பல்வேறு நாடுகளில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் அதற்கும் அட்வான்ஸாக தற்போது சீனா உள்ளங்கை ரேகையை ஸ்கேன் செய்தே பேமண்ட் செலுத்தலாம் என்ற தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்திருப்பது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரபலமான WeChat Pay இயங்குதளத்துடன் இணைக்கப்பட்ட இந்த தொழில்நுட்பமானது கையில் உள்ள ரேகைகள் உள்ளிட்ட பயோமெட்ரிக் தகவல்களை கொண்டு பணம் செலுத்த உதவுகிறது.







