மாணவரின் உயிரைப் பறித்த பள்ளி வாகனம்: 8 மணி நேரமாகியும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என உறவினர்கள் புகார்!

சிவகங்கையில் மாணவரின் உயிரைப் பறித்த பள்ளி வாகன விபத்தில், 8 மணி நேரமாகியும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.  சிவகங்கை மாவட்டம் பெரியகோட்டை என்னும் இடத்தில் சார்லஸ் மெட்ரிகுலேசன் என்னும் தனியார்…

சிவகங்கையில் மாணவரின் உயிரைப் பறித்த பள்ளி வாகன விபத்தில், 8 மணி நேரமாகியும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

சிவகங்கை மாவட்டம் பெரியகோட்டை என்னும் இடத்தில் சார்லஸ் மெட்ரிகுலேசன் என்னும் தனியார் பள்ளி உள்ளது. சார்லஸ் மெட்ரிகுலேசன் பள்ளியில் பயிலும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளி வாகனத்தில் வருவது வழக்கம். அந்த வகையில், இன்று காலையில் மாணவர்களை ஏற்றிவந்த வேன், சர்வநேந்தல் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த கண்மாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சம்பவ இடத்திற்கு அருகிலிருந்த பொதுமக்கள் பள்ளி வாகனத்தில் இருந்த மாணவர்களை மீட்டனர். இந்த விபத்தில் முலைக்குளத்தை சேர்ந்த ஹரிவேலன் (வயது 12) என்ற 7ம் வகுப்பு மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விபத்து குறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து சம்பந்தபட்ட பள்ளியிருக்கும் இடத்திற்கு விரைந்த நியூஸ்7 தமிழ் செய்தியாளர் அங்குள்ள பொதுமக்களிடம் இந்த விபத்து குறித்து கேட்டறிந்தார். அப்போது விபத்து குறித்து பொதுமக்கள் கூறியதாவது:

10 ஆண்டுகளாக சார்லஸ் பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. பள்ளியில் 3 வாகனங்கள் உள்ளன. இன்று வழக்கமாக பள்ளி வாகனத்தை இயக்கும் நடராஜன் என்பவர் உடல்நலக்குறைவால் வரமுடியாத நிலையில், அவரது தம்பி சுரேஷ் என்பவர் வாகனத்தை இயக்கியுள்ளார். விபத்து நடந்த பிறகே எங்களால் நடந்தது என்ன என்பதை உணர முடிந்தது.

கிராமங்களில் நடத்தப்படும் தனியார் பள்ளி வாகனங்களில் பெரும்பாலும் விதிகளை பின்பற்றுவது இல்லை. தற்போது பள்ளி கேட் அடைக்கப்பட்டநிலையிலும், காவலர் ஒருவர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். சம்பவம் நடந்து 8 மணி நேரமாகியும் இன்னும் விபத்துகுறித்து வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

இவ்வாறு அப் பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

மேலும் இதுதொடர்பான நியூஸ் 7 தமிழின் நேரலை காணொலியை காண :

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.