ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி அதிமுகவின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் செங்கோட்டையன் விஜயபாஸ்கர், ஒ.எஸ்.மணியன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு பின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், எடப்பாடி பழனிசாமி தலமையில் கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் களத்தில் முதன்முறையாக இடைத்தேர்தலை சந்திக்கிறோம். கொங்கு மண்டலம் என்பது அதிமுகவின் எக்கு கோட்டை. யாராலும் தகர்க்க முடியாது. அனைத்து பகுதிகளிலும் தேர்தல் களம் கண்டவர்கள் வந்துள்ளனர். பல தேர்தலை சந்தித்தவர்கள் பணியாற்றுகிறார்கள்.
தேர்தல் களத்தில் அமைதியோடு மக்களை சந்தித்து வாக்குகளை சேகரிக்கும் பணியை சிறப்பாக செய்து வருகிறோம். இந்த தேர்தல் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். திண்டுக்கல் இடைத்தேர்தல் போல் வரலாற்று சிறப்புமிக்கதாக ஈரோடு இடைத்தேர்தல் இருக்கும். வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டது. ஆகவே களத்தில் பணிகளை சிறப்போடு அமைதியோடு செய்து வருகிறோம்.
நீதிமன்றத்தில் உள்ள வழக்கை பொறுத்தவரை, நீதித்துறையில் என்னென்ன தேவையோ அதை பூர்த்தி செய்து செயல்பட்டு வருகிறோம். அச்சமின்றி தேர்தல் பணி செய்கிறோம். தெளிவாக 98.5% பேர் ஒரு மனதாக பொதுச் செயலாளரை தேர்வு செய்து தலைமை கழக நிர்வாகிகள் செயலாற்றுகிறோம்.
முழு மனதோடு வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கையோடு உள்ளோம். 4 அணிகளாக பிரிந்து போட்டியிடுவதால் எங்கள் வாக்குகள் சிதறாது. தேர்தல் களத்தில் மனு தாக்கல் தொடங்க இருக்கிறது. நீதி மன்றத்தில் வழக்கு உள்ளதையும் ஆய்வு செய்து வருகிறோம் முழுமையாக ஆய்வு செய்த பிறகு வேட்பாளர் அறிவிக்கப்படுவார். குருச்சேத்திர யுத்தத்தை போல் வியூகம் வகுத்து தேர்தலை சந்தித்து வருகிறோம். இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.
மேலும், பாஜகவுடன் கூட்டணியா அல்லது தனித்து போட்டியா குறித்த கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறினார். மேலும், வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.







