ஜெயலலிதாவைப் போலச் சிறப்பாக எடப்பாடி பழனிசாமி செயல்படுவார் எனப் பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன் தெரிவித்துள்ளார்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில், என்.ஆர் தனபாலன் சந்தித்துப் பேசினார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மரியாதை நிமிர்த்தமாக சந்தித்ததாகவும், அதிமுக தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், திமுகவிலிருந்து எம்ஜிஆர் வெளியேறியபோது, எம்ஜிஆர் தலைமையில் கட்சி உருவாக வேண்டும் என அவர் நினைத்தனர். அதுபோல, இபிஎஸ் மீது தற்போது எழுச்சி ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.
அண்மைச் செய்தி: ‘சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்; 100 தீர்மானங்கள் நிறைவேற்றம்’

மேலும், நான்கரை ஆண்டுக் காலம் சிறப்பான ஆட்சியை வழங்கியதாகக் குறிப்பிட்ட அவர், ஜெயலலிதா போலச் சிறந்த தலைமையாக இவர் செயல்படுவார் எனத் தெரிவித்தார். சசிகலா, தினகரன், திமுக எனத் தொடர் எதிர்ப்புகளுக்கு மத்தியில், சிறப்பான ஆட்சியை வழங்கியவர் எனக் கூறிய என்.ஆர். தனபாலன், அதிமுக வை வழிநடத்த இபிஎஸ் பொதுச்செயலாளராக வரவேண்டும் என்றும், அதற்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாக அவர் கூறினார்.







