அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அக்கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டன. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் அதிமுகவின் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வரும் 26ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. வேட்புமனு பரிசீலனை 20ம் தேதி நடக்கிறது. வேட்புமனுக்களை 21ம் தேதி மாலை 3 மணி வரை திரும்ப பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை தொடங்கியுள்ள நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், நீதிமன்ற அறிவுறுத்தலின்படி 50 போலீசார் இரவு, பகலாக சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க கூடுதல் பாதுகாப்பு கோரி அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளதால், கூடுதலாக 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ள சூழலில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து, பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் எனவும் அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அதிமுக தலைமை அறிவித்தது.
வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நாளை பிற்பகல் மூன்று மணியுடன் நிறைவடையும் நிலையில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய வேட்புமனுத் தாக்கல் செய்தார். பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தும் ஆணையர்களான நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் வேட்புமனுவை இபிஎஸ் வழங்கினார். எடப்பாடி பழனிசாமி வேட்புமனுவை, 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிந்தனர். 10 மாவட்டச் செயலாளர்கள் வழிமொழிந்தனர்.
முன்னதாக அதிமுக அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.