தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களுக்கு மட்டுமே ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. மீதமுள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6,9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. அதன்படி, 9 மாவட்டங்களில் பெறப்பட்ட 98,151 வேட்பு மனுக்களில் 1,166 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 14,571 பேர் வேட்பு மனுக்களை திரும்பப்பெற்றனர். 2,981 பணியிடங்களுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் குறித்து விழுப்புரத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் தனி மனிதனுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற 130 நாட்களில் 202 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் கூறிய நிலையில் 3, 4 அறிவிப்புகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். அதிமுக கொண்டு வந்த திட்டங்களுக்கு திமுக அரசு அரசியல் ஆதாயம் தேடிவருவதாக கூறிய அவர், அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெற்றதாக தெரிவித்தார்.