காவிரி நீர் பங்கீட்டை தமிழ்நாட்டிற்கு முறையாக, கர்நாடக அரசு வழங்கவில்லை என, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டியது.
காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு சார்பில் பொதுப்பணித்துறை செயலாளர் சந்திப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்றனர். இதில், தமிழ்நாட்டிற்கு செப்டம்பர் மாதத்திற்கு வழங்க வேண்டிய 28 டிஎம்சி பற்றாக்குறை தண்ணீர், அக்டோபர் மாதத்திற்கான 20 டிஎம்சி தண்ணீர் என மொத்தம் 48 டி.எம்.சி நீரை உடனடியாக காவிரியில் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
கடந்த முறை ஆணையம் உத்தரவு பிறப்பித்தும், கர்நாடக அரசு அதனை நடைமுறைப்படுத்தவில்லை எனவும், இது ஆணையத்தின் உத்தரவை மீறும் செயலாகும் எனவும் தமிழ்நாடு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் கர்நாடகத்தில் தற்போது அதிகப்படியான மழை நீடித்து வரும் நிலையிலும், அம்மாநில அரசு தண்ணீரை திறந்து விடவில்லை எனவும், கர்நாடகா அரசு மீது தமிழ்நாடு அரசு உறுப்பினர்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மேலும், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்கவும் தமிழ்நாடு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.







