கோவையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.10 லட்சத்தை இழந்த வாலிபர் ஓட்டல் அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்
கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சிங்காநல்லூர் உப்பிலி பாளையம், ஆர்.வி.எல்நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் சங்கர் (வயது 29). சென்னையில் என்ஜினீயராக வேலை செய்து வந்த சங்கர் கடந்த வாரம் பணியை ராஜினாமா செய்துவிட்டு கோவை திரும்பினார். சங்கருக்கு பல மாதங்களாக ஆன்லைன் சூதாட்டம் பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதில் கிட்டத்தட்ட ரூ.10 லட்சம் வரை பணத்தை இழந்த சங்கர் கடன் தொல்லையால் அவதி பட்டுவந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் சம்பவத்தன்று கோவை ராம்நகர் சாஸ்திரி சாலையி்ல் உள்ள சுபஸ்ரீ ஹோட்டலுக்கு சென்ற சங்கர் மீட்டிங் நடத்த அறை வேண்டும் என அறையை வாடகைக்கு எடுத்துள்ளார். ஆனால், மறுநாள் ஆகியும் அவர் அறையை விட்டு வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த மேலாளர் இதுகுறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் அளித்தார்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அறையின் கதவை மாற்று சாவி மூலம் திறந்து பார்த்தனர். அப்போது அந்த அறையில் சங்கர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனையடுத்து சடலத்தை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது தொடர்பாக சுபஸ்ரீ ஓட்டல் மேலாளர் சிவதாசன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே சங்கர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் சோதனை செய்த போது, சங்கர் எழுதிய ஒரு கடிதத்தை கைப்பற்றினர். அதில், அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததாகவும், அதிக அளவு கடன் உள்ளதால் உயிரை மாய்த்துக் கொள்வதாகவும் எழுதி வைத்துள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.