#ElephantDied | ராஜபாளையம் அருகே மின்வேலியில் சிக்கி யானை பலி – ஒருவர் கைது!

ராஜபாளையம் அருகே சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்த நிலையில், வனத்துறையினர் ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட…

ராஜபாளையம் அருகே சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்த நிலையில், வனத்துறையினர் ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகத்திற்கு
உட்பட்ட ராக்காச்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் வழியில் அழகர் காடு பகுதியில் தென்னந்தோப்பு உள்ளது. இந்த தோப்புக்குள் வன விலங்குகள் வந்து பயிர்களை சேதப்படுத்துவதை தவிர்க்க, உயர் அழுத்த மின் கம்பியிலிருந்து சட்ட விரோதமாக சிறிய அளவிலான கம்பி மூலம் மின்வேலி அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் வனப்பகுதிக்குள் இருந்து உணவு தேடி வந்த சுமார் 20 வயது
மதிக்கத்தக்க ஆண் யானை தோப்புக்குள் சென்று அங்கிருந்த தென்னங்கன்றை தின்றது. அப்போது எதிர்பாராத விதமாக சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கியதில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்தது.

கைது செய்யப்பட்ட நபர்

இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் வனத்துறையினர் நடத்திய விசாரனையில் தென்னந்தோப்பு உரிமையாளர் மகேஸ்வரி என்பதும் இவருக்கு சொந்தமான தோப்பை துரைப்பாண்டி என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்ததும் தெரியவந்தது .

இந்த நிலையில் யானை இறந்தது தொடர்பாக துரைப்பாண்டியை கைது செய்த வனத்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். நேற்று மழை பெய்ததன் காரணமாக பிரத பரிசோதனை நடைபெறாமல் இருந்த நிலையில் இன்று யானைக்கு பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. கால்நடை மருத்துவர்கள் இறந்த யானையை உடற்கூராய்வு செய்த பின்னரே மற்ற தகவல்கள் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.